• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

January 11, 2017 தண்டோரா குழு

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்ததையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை மிகக் குறைவாகப் பெய்துள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்” என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது மிகவும் காலதாமதமானது என்றாலும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு ஏதோ உணர்ந்து கொள்ள முயற்சிக்கிறது என்ற அளவில் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு பருவமழை ஒரு காரணம் என்றாலும், காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் தராத கர்நாடகத்திடமிருந்து பேச்சுவார்த்தையின் மூலமோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலமோ அதிமுக அரசால் விவசாயத்திற்குத் தண்ணீரைப் பெற முடியவில்லை. இது அதிமுக அரசின் இமாலயத் தோல்வி என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்.

அதிமுக அரசின் பொறுப்பற்ற நிர்வாக சீர்கேட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளிலும் ஒரு வருடம் கூட பாசனத்திற்காக மேட்டூர் அணையை உரிய சமயத்தில் திறக்க முடியவில்லை. காவிரி டெல்டா விவசாயிகள் இன்று தண்ணீருக்காகக் கண்ணீர் சிந்தும் நிலை உருவாகி விட்டது.

விவசாயம் சருகு போல் பட்டுப் போவதைப் பார்த்தும், நிலங்கள் தரிசாகிப் பாளம் பாளமாக வெடித்துப் போவதைப் பார்த்து முடியாமல், இதுவரை 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டு விட்டார்கள். காவிரி டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி, ஈரோடு பகுதியில் உள்ள மஞ்சள் விவசாயிகள், தேனி பகுதியில் உள்ள வாழை விவசாயிகள், வட மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகள் என்று எல்லா விவசாயிகளும் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து விவசாயிகள் சங்கங்களையும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து, விவாதித்து ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறோம்.

அந்த தீர்மானத்தை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களிடம் நானே நேரில் சந்தித்துக் கொடுத்திருக்கிறேன். சமீபத்தில் கூட முதலமைச்சருக்குக் கடிதமே எழுதி விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும் சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறேன். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. இந்த அரசை முன்கூட்டியே எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கண்துடைப்புக்காக அதிமுக அமைச்சர்களை அனுப்பி விவசாயிகள் பாதிப்பு குறித்து பார்வையிடச் சொன்னார்கள். அப்படிச் சென்ற அமைச்சர்கள் “வறட்சி மாநிலமாக அறிவிக்க முடியாது” என்றும், “விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை” என்றும் கொச்சைப்படுத்தினார்கள்.

இப்போது முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் பயிர்க்கடன்கள் மத்திய காலக்கடன்களாக மாற்றப்படும் என்று கூறியிருக்கிறார். விவசாயமும் இல்லை. விளைச்சலும் இல்லை. வேறு எப்படி விவசாயிகள் அந்தக் கடனைச் செலுத்த முடியும் என்பதை அரசு ஆலோசனை செய்ததாகத் தெரியவில்லை.

ஆகவே, மத்தியகாலக் கடனாக மாற்றுவதற்குப் பதில் அந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுவே விவசாயிகளின் துயர் துடைக்கும் நடவடிக்கை.

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால், ஏக்கருக்கு 5465 ரூபாய் இழப்பீடு என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது “யானைப் பசிக்கு சோளப்பொரி” போடுவது போல பயனற்ற அறிவிப்பாகும். ஆகவே, இந்த இழப்பீட்டை ஏக்கருக்கு 30 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை ஊடகங்களின் மூலமாக உலகமே அறியும். அவர்களின் குடும்பத்தாரின் கருத்துகளையும் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன. ஆனால், “விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உடல் நலக்குறைவால் இறந்தார்கள்” என்று அதிமுக அமைச்சர்கள் கூறியுள்ளனர். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு தமிழகம் முழுவதும் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டார்கள்” என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

தற்போது 17 பேருக்கு வழங்கப்படுவதைப் போல தற்கொலை, அதிர்ச்சி ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து அவர்களின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்கிட வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் உதவும் வகையில் இந்த வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். தூர் வாருதல், நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகளை நிறைவேற்ற ஒதுக்கப்படும் நிதி வெளிப்படைத்தன்மையுடன் செலவிடப்பட வேண்டும்.

“மத்திய அரசின் நிதியுதவி கோரி மனு தயார் செய்யப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். கோரிக்கை மனுவைத் தயார் செய்து கொண்டு முதலமைச்சரே நேரடியாகச் சென்று பிரதமரைச் சந்தித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையாக பாதுகாக்கவேண்டும். போர்க்கால நடவடிக்கையில் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

விவசாயிகள் உயிரிழப்பு தொடர்வதால், தமிழகத்தை வறட்சி மாநிலமாகக் கருதி, மத்திய அரசின் நிதியைப் பெறுவதில் தீவிரம் காட்ட வேண்டும். ஒட்டுமொத்த விவசாயிகளின் நிலை பற்றி விவாதிக்க தி.மு.க. கோரியபடி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க