November 27, 2017
தண்டோரா குழு
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனை அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன் உறுதிப்படுத்தினார்
டி.டி.வி.தினகரனுக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள், 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்த நிலையில் தற்போது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.