May 4, 2020
தண்டோரா குழு
மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மாவுத்தம்பதி கிராம ஊராட்சியில் தொடர்ந்து தூய்மை கிராமமாக உருவாக்கி கொரோனா தொற்று இல்லாத ஊராட்சியாக மாற்றியுள்ள மாவுத்தம்பதி ஊராட்சி தலைவரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உலகமெங்கும் வேகமாக பரவி பெரும் பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நகர் புற பகுதிகளில் வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய் கிராமங்களில் பரவாமல் இருக்க ஊராட்சி மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையை அடுத்த மாவுத்தம்பதி எனும் ஊராட்சியில் புதுப்பதி, சின்னாம்பதி, முருகம்பதி என மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் கைகளை சுத்தம் செய்வது போன்ற முறைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பாக தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனால் கொரோனா வைரஸ் மட்டுமல்லாது வேறு எந்த நோய்களும் இனி பரவாமல் இருக்குமாறு சுகாதாரமான முறையில் வாழ மக்கள் பழகியுள்ளதாக மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
கடந்த நாற்பது நாட்களாக இந்த பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது,வீடுகளை தூய்மையாக வைக்க கிராம மக்களை அறிவுறுத்துவது பல்வேறு பணிகளை மேற்கொண்டதாகவும்,இதனால் இந்த கிராமம் கொரோனா வைரஸ் மட்டுமல்லாது வேறு எந்த நோய்களும் இனி வராமல் இருக்கும் வகையில் மக்கள் வாழ கற்று கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.தொடர்ந்து ஊர் மக்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து வழங்கி வருவதாக துணை தலைவர் புவனேஸ்வரி தண்டபாணி தெரிவித்தார்.இவர்களுடன் இணைந்து வார்டு உறுப்பினர்கள்நல்லி,பூங்கொடி,சுதாகர்,செந்தில்குமார்,ராஜேஸ்வரி, சக்திவேல், மோகனதீபா ஆகியோர் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.