May 6, 2019 தண்டோரா குழு
வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை சொல்லியதால் காசாளர் பழனிசாமியை மார்டின் நிறுவனத்தினர் அடித்து கொலை செய்துள்ளதாக அவரது மனைவி சாந்தாமணி தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் மார்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மனைவி சாந்தாமணி மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யாவிடம் புகார் மனு அளித்தார். அதில், பழனிசாமி மரணம் தொடர்பாக மார்டின் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பழனிசாமியை சாதி சொல்லி திட்டிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மார்டின் நிறுவன உரிமையாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.ஜியிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனைவி சாந்தாமணி,
பழனிசாமி மரணத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும், மார்டின் நிறுவனத்தினருமே காரணம். பழனிசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் சாதியை சொல்லி இழிவுபடுத்தியுள்ளனர். ரெய்டு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எனது கணவரை விடிய, விடிய அடித்து துன்புறுத்தியதோடு, கழுத்தை நெறித்து ,கையை அறுத்தனர். 3 கோடி தருவதாக காவல்துறை அதிகாரிகள் பேரம் பேசினர். எங்களது வீட்டை சீல் வைத்து விடுவேன் என காவல் துறை மிரட்டுகின்றனர். டி.எஸ்.பி மணி எங்களை மிரட்டுகிறார். பணம் வாங்கிக் கொண்டு விலகி விடுமாறு மிரட்டல் விடுக்கின்றார். டிஎஸ்பி மணி மீது ஐஜியிடம் புகார் அளித்துள்ளேன். அவரை இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும்,லீமா ரோஸ் எங்களிடம் நேரடியாக பேசவில்லை டிரைவர் மூலமாக வருமான வரித்துறை மீது புகார் கொடுக்க சொல்லி மிரட்டுகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை சொல்லியதால் தான், மார்டின் நிறுவனத்தினர் அடித்து கொலை செய்துள்ளனர்.மார்டின் நிறுவன ஊழியர்கள் கென்னடி, ராஜா, பிரகாஷ்,வேதமுத்து, ஆகியோர் மீது சந்தேகம் இருக்கிறது. மார்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ், மார்டின் நிறுவனத்தினர் மீதும்,வருமான வரித்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.