August 18, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட உப்பிலிபாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தூய்மைப் பணியாளர்களிடம் கூறுகையில்,
நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். வீடுதோறும் குப்பைகளை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும். கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்,’’ என்றார்.
தொடர்ந்து எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி ஏரோட்ரூம் ரோடு, கங்கா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டு வரும் பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, கால்வாயில் நீர் தேங்காமல் சீராக செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் (கிழக்கு) ஞானவேல், கிழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.