April 3, 2019 தண்டோரா குழு
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி அனைவரையும் வியப்பாக பார்க்க வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘மனைவியை எதிர்ப்போர் சங்கம்’ என்ற சங்கத்தை ஆரம்பித்து நடத்தி வருபவர் தசரத் தேவ்தா. இவரது சங்கத்தில் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் சங்கதலைவர் தேவ்தா இறங்கியுள்ளார். அகமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்குகிறார் தேவ்தா. மனைவியாலும் அவரின் உறவினர்களாலும் பாதிக்கப்பட்ட கணவர்களின் நலனை பாதுகாப்பதே தனது நோக்கம். தேர்தலில் மற்ற வேட்பாளர்களை போல பணத்தை கொடுத்து ஓட்டு கேட்கமாட்டேன். கணவர்களை துன்புறுத்தும் மனைவிகளுக்கு சட்டப்பிரிவு 498 உதவுவதாகவும், தான் எம்பி ஆனால் இதை திருத்த நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
இவர் ஏற்கனவே 2014 மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இதே வாக்குறுதியை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இவர் 2 ஆயிரத்து 300 வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.