December 10, 2020 தண்டோரா குழு
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது.
இதனிடையே மேம்பால பணிகள் தாமதம் காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கவுண்டம்பாளையம் மேம்பாலபணிகள் தற்போது போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் நடந்து வருகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.