March 19, 2018
மத்திய அரசை காப்பாற்ற அதிமுக நாடகமாடுகிறது என சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக, தெலுங்குதேசமும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நோட்டீஸ் அளித்துள்ளன. இந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்ளலாமா என்பது தொடர்பாக இன்று மக்களவையில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்ப்பட்டது. ஆனால் அதிமுக எம்.பி.க்கள், தெலுங்கு தேச எம்.பி.க்கள் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முதல்முறையாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போது, நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என விரும்புவதாகவும், எனவே அனைத்து உறுப்பினர்களும் அமைதி காக்குமாறும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அமளி ஓயாததால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதிமுக எம்.பி.க்கள் மத்திய அரசின் கட்டளைப்படி செயல்பட்டு மக்களவையை இயங்க விடாமல் செய்கின்றனர் என்றும் மத்திய அரசை காப்பாற்ற அதிமுக நாடகமாடுகிறது என்றும் சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம்சாட்டினார்.