January 8, 2019 தண்டோரா குழு
நாடு முழுவதும் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு, தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை செய்ய மறுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள் இன்றும், நாளையும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஐஎன்டியூசி, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக 10 தொழிற்சங்கத்தினர், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து துறையினர், மருத்துவம், தொலைத் தொடர்பு துறையினர் இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், ஸ்டிரைக்கில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் வங்கி சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.