March 19, 2018
தண்டோரா குழு
மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முடிவெடுக்க வரும் 29ஆம் தேதி வரை காத்திருப்போம் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு மீது கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்துகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி மத்திய அரசு ஏதேனும் தகவல் தெரிவித்துள்ளதா என அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்தில் இன்னும் அவகாசம் இருப்பதால் அதுவரை பொறுத்திருப்போம். இவ்விகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தகவல் வரும் வரை அதிமுக எம்.பி-க்களின் போராட்டம் தொடரும். 11-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதிமுக எம்.பி-க்களின் தொடர் போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. ஆகவே மத்திய அரசு இவ்விவகாரத்தில் என்ன செய்கிறது என்று வரும் 29-ம் தேதி வரை பொறுத்து பார்ப்போம் என ஓபிஎஸ் பதில் அளித்தார்.