January 30, 2019 தண்டோரா குழு
மத்தியில் முழு பெரும்பான்மை அரசு ஆட்சியமைய வேண்டும் அத்தகைய அரசால் மட்டுமே வலுவான முடிவுகளை எடுக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற விமான நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய முனையம் கட்டுவதற்கான அடிக்கள் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இதுவரை 1.30 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் விமானத்தில் பயணிக்கும்வகையில் சூழலை எளிமைப்படுத்தி, உதான் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த 25 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக அரசு 5 ஆண்டுகளில் அதனை செய்து முடித்துள்ளது. மத்தியில் முழு பெரும்பான்மையான அரசு அமைய வேண்டும் அத்தகைய அரசால் மட்டுமே கடுமையான மற்றும் வலுவான எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க முடியும். முந்தைய கூட்டணி ஆட்சிகளில் முடிவு எடுக்க முடியாமல் திணறியதால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த பாஜக அரசு எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டி உள்ளது ” என அவர் குறிபிட்டுள்ளார்.