December 12, 2018
தண்டோரா குழு
மத்தியபிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் அழைப்பு விடுத்துள்ளார்.
தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி அதிக இடங்களை பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மிசோரமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. 230 இடங்களை கொண்ட பெரிய மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. ஆளும் பாஜகவும் சிறிய எண்ணிக்கை வித்தியாசத்தில் பின்தொடர்ந்தது.
ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர். யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரசிற்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
இதையடுத்து, மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்த் பின் படேலிடம் ஆட்சி அமைக்க உரிமைக்கோரி பகல் 12 மணிக்கு ஆளுநரை காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்கின்றனர்.