March 18, 2019 தண்டோரா குழு
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
17-வது நாடாளுமன்றத் தேர்தல்இந்தியா முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அதேநாளில் மதுரையில் பிரதிப்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என்றும் அதனால் தேர்தல் தேதியை மாற்றி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தது.
இந்நிலையில், மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.