January 17, 2019 தண்டோரா குழு
மதுபானங்கள் விற்கும் கிளப்களில் இனி நடனமும் நடத்த அனுமதி தரலாம் என மும்பை மாநகராட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மதுபானங்களுடன் நடன பார்கள் நடத்த அம்மாநில அரசு 2006 ம் ஆண்டு தடை விதித்தது. 2005 ம் ஆண்டு முதலே புதிய நடன பார்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதில், நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகளை முற்றிலுமாக தடை விதிப்பது தவறு. அதற்கு பதிலாக அதனை ஒழுங்குபடுத்தி செயல்படுத்த வேண்டும்.மேலும், மத்திய அரசின் விதிமுறைப்படி பார்களில் CCTV கேமிரா பொருத்தப்பட வேண்டும். ஆனால் நடன பார்களில் CCTV கேமராக்கள் பொருத்துவது தனி மனித உரிமைகளை மீறும் செயல். நடன பார்களில், மது பரிமாறுவதற்காக தனி இடம் ஒதுக்கக் கூறும் மாநில அரசின் உத்தரவு ஏற்கக் கூடியதாக இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த மாதிரியான விடுதிகள், பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும் எனவும், நடனமாடும் பெண்களுடன் சரியான முறையில் ஒப்பந்தம் கையெழுத்திடவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதைபோல் பார்களில் நடனம் ஆடுவோருக்கு பரிசு வழங்கலாம். ஆனால் பணத்தை வாரி மழை போல் இரைக்கக் கூடாது. மாலை 6 முதல் இரவு 11.30 மணி வரை மட்டுமே நடன பார்கள் இயங்க வேண்டும் என்ற மாநில அரசின் வரையரை தொடரும். மும்பை போன்ற பெரு நகரில் நடன பார்களுக்கு தடை விதிப்பது சாத்தியமற்றது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.