May 6, 2020
தண்டோரா குழு
மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாதர்சங்கத்தினர் இன்று மனு அளித்தனர்.
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில், மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாதர்சங்கத்தினர் இன்று மனு அளித்தனர்.
இது குறித்து மாதர் சங்கம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
கோவிட் 19 என்ற கொடிய நோயால் உலகமே போயுள்ளது. இந்தியா முழுவதிலும் இதுவரை 50,000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக இல்லாத அளவு நேற்றையதினம் 527 பேருக்கு கொரனாநோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மாநில தலைநகர் சென்னையில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
கொரனா மூன்றாம் நிலை என்று சொல்லக்கூடிய சமூக பரவலுக்கு உள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதிலும் மதுபான கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.நேற்றைய தினம் மதுபான கடைகளை திறந்த டில்லி, மஹாராஸ்டிரா, ஆந்திராபோற்ற மாநிலங்களில் சமூக இடைவெளி பராமரிக்கப்படாமல் பல கிலோ மீட்டர் தூரம் குடிகாரர்கள் மதுக்கடைகளை திறக்குமுன்னரே வரிசையில் நின்று இருக்கின்றார்கள்.பல இடங்களில் காவல் துறை தடியடி நடத்தி கூட்டத்தெக்கலைத்துள்ளது. இத்தகைய மோசமான முன்னுதாரணத்தை பிறமாநிலங்களில் பார்த்த பின்பும் தமிழக அரசு வருகின்ற ஏழாம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அருகில் ஆந்திரா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து இருப்பதாகவும்,தமிழக மக்கள் பக்கத்து மாநிலத்திற்கு எல்லை தாண்டி போய் மது வாங்கி வருவதாகவும் எல்லையில் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை எனவே தமிழகத்தில் மதுபான கடைகளை திறப்பதாக அரசு அறிவித்திருப்பது கேளிக்கூத்தானது.மாநில எல்லை தாண்டுபவர்களை கட்டுப்படுத்த முடியாதஅரசு தமிழகத்திலுள்ள 7000 டாஸ்மாக்கடைகளில் எப்படி சமூக இடைவெளியை பாதுகாக்கும்?.
40 நாட்களாக எந்த தொழிற்சாலைகளும் திறக்கப்படவில்லை. பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கிறது. சாதாரண ஏழை எளிய கூலி தொழிலாளிகள் வேலை கிடைக்காமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.சாதாரண ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க வேண்டிய தமிழக அரசோ அதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன்?
ஊரடங்கு காலத்தில் குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையமும் ,மாநில மகளிர் ஆணையமும் அறிக்கை வெளியிட்டிருந்தன. மது பானம் கிடைக்காமலேயே இத்தனை வன்முறைகளை எதிர்கொண்ட பெண்கள் டாஸ்மாக் கடைகள் திறப்பதால் இன்னும் பல மடங்கு குடும்ப வன்முறைகள் சந்திக்க நேரிடும் என்பதை ஜனநாயக மாதர் சங்கம் சுட்டி காட்டுகிறது.எனவே தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் கடைகளை திறப்பதை இச்சமூக நலன் கருதி நிறுத்தி வைக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது.
மேலும் சமூகப்பரவல் அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் இந்த சமூக பரவல் அதிகமாவதற்கான வாய்ப்புகளுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, கிழக்கு நகர மாதர் சங்க தலைவர் வனஜா நடராஜன் ஆகியோர் மனு அளித்தனர்.