May 6, 2021 தண்டோரா குழு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களின் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாகக் குழு கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், கட்சி கட்டமைப்பினை வலுப்படுத்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் கலந்துகொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் ஆர்.மகேந்திரன், எம். முருகானந்தம், மெளரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே.குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் (தேர்தல் வியூக அலுவலகம்) ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர். இவற்றை ஏற்றுக்கொள்வதும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதையும் தலைவரே முடிவு செய்யட்டும் என தெரியப்படுத்தினர்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கொடுத்த கடிதங்களை தலைவர் விரைவில் பரிசீலனை செய்வார் என்று தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.