May 23, 2019 தண்டோரா குழு
தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்ல என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், நாடு முழுவதும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 342 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி முனைப்பில் உள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு பாஜக 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் டிவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் எல்லாம் தோற்றுப் போனாவர்கள் அல்ல. நாங்கள் முழுமையாக ஆய்வு செய்த எங்களின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். விவிபேட் இயந்திரத்துடன் பொருந்தக்கூடிய வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடியட்டும்” என்று தெரிவித்துள்ளார்.