January 24, 2019 தண்டோரா குழு
சேலம் ஆத்தூரில் காவல் நிலைய வாகனத்தை சட்டத்திற்குப் புறம்பாக பயன்படுத்தி டிக் டாக் (Tik Tok) வீடியோ எடுத்த இரண்டு மெக்கானிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர், காவல் நிலைய வாகனம் பழுதடைந்த காரணத்தால் பழுது நீக்குவதற்காக தனியார் மெக்கானிக் கடையில் அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து வாகனத்தின் பழுது நீக்கும் கடையில் ஊழியர்களாக பணியாற்றி வரும் மெக்கானிக்குகள் சந்தோஷ் குமார் என்பவரும், சபரி பிரியன் என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும், சட்டத்திற்குப் புறம்பாக, காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காவல்துறை வாகனத்தை பயன்படுத்தி, TIK TOK செயலி மூலம் இருவரும் சினிமா ஸ்டைலில் போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி வருவது போல் டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த வீடியோ வைரலாக தொடங்கியது. இதனை அறிந்த சேலம் ஆத்தூர் காவல்துறை இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.