April 4, 2019 தண்டோரா குழு
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில்கன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மலையாள படம் லூசிபர். இப்படம் கேரளாவில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் திரையிட்டுள்ளனர்.
இப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பில் மோகன்லால் சண்டைக் காட்சிகளில் அதிரடிகாட்டி இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இதற்கிடையில், படத்தில் சண்டை காட்சி ஒன்றில் மோகன்லால் செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மிதிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதையே படத்தின் விளம்பரத்திற்காக சுவரொட்டிகளாக அச்சிட்டும் கேரளாவில் ஒட்டி உள்ளனர். தற்போது அந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து, கேரள போலீஸ் சங்கம் இதனை கண்டித்து முதலமைச்சரிடன் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில்,
“மக்கள் மத்தியில் போலீசார் மீது அவப்பெயரை ஏற்படுத்துவது போல் இந்த காட்சி உள்ளது. முன்பு குற்றவாளிகளே போலீஸ் மீது கைவைக்க பயந்தனர். தற்போது பொதுமக்கள்கூட போலீசை தாக்க அஞ்சாத நிலை உள்ளது. இந்த மாதிரி படங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து போலீசை தாக்க தூண்டிவிடுகின்றன. புகையிலை, மது அருந்துவது தவறு என்று படத்தில் வாசகம் இருப்பதுபோல், போலீசாரை தாக்குவது தவறு என்ற வாசகமும் இடம்பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.