April 30, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தொடர்பாக தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்த நிலையில் சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்தது.
எனினும் கடந்த 26ம் தேதி வரை இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது,இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பெற்ற வாக்குமூலம் மற்றும் விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி வழக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. கோவை மாவட்ட செயலாளர் ராதிகா தொடர்ந்த இந்த வழக்கில் புதிதாக 4 வீடியோக்களை சிபிசிஐடியிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வழங்கியது.
மேலும், இந்த வழக்கில் புதிதாக வழங்கிய 4 வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜூன் 12-க்குள் தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.