March 29, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்தபிறகும் சிபிசிஐடி விசாரிப்பது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடைமுறைகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.
இதனிடையே “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த தமிழக அரசின் பரிந்துரை கடிதம் சிபிஐக்கு வந்து விட்டது. வழக்கை சிபிஐ விசாரிப்பது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரை கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பி உள்ளோம்” என பாலியல் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.