• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; ஆன்லைன் மூலம் சாட்சி விசாரணை

February 25, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மற்றும் பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்தி வந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில் வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு, விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34), அருண்குமார் (30) ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின், 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி 9 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், பெண்கள் கடத்தல், கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், வன்கொடுமை, ஆபாச வீடியோவை பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் புரிதல் உள்பட 10 சட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதன்பின், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சாட்சி விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், இன்று மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது. அறையின் கதவுகள் மூடப்பட்டு, இன்கேமரா முறையில் ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது.

இந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களும் அழைத்து வரப்படாமல் ரகசிய இடத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சாட்சியம் அளித்தனர்.

மேலும் படிக்க