April 26, 2019
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைதானவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார், தற்போது கூடுதலாக பாலியல் வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் கீழ் உள்ளனர். மேலும், இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டதில், 5 பேரும் இணைந்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதையும், அதனை படம் பிடித்து வைத்து தொடர்ந்து வன்கொடுமை சம்பவங்களை நடத்தியதையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
மணிவண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து, கூடுதலாக பாலியல் வன்கொடுமை (கற்பழிப்பு) பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.