August 14, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி அடுத்த சர்க்கார் பதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன குழந்தை 5 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை சர்க்கார்பதி மலைவாழ் மக்கள் வசித்த குடியிருப்புகளை கடந்த 5 நாட்களுக்கு பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்டது. உயிருக்கு போராடியவர்களை வனத்துறையினர் மீட்டு முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் சேர்த்து காப்பாற்றினர். இந்நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த குஞ்சப்பன் – அழகம்மாள் ஆகியோரின் 2 வயது குழந்தை சுந்தரி காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.
குழந்தையின் உடலை வனத்துறையினர் கடந்த 5 நாட்களாக தேடி வந்த நிலையில் ஆழியாறு உட்டுக் கால்வாயில் 4 கிலோ மீட்டருக்கு அப்பால் குழந்தையின் உடல் கிடப்பதாக அருகில் உள்ள தோட்ட உரிமையாளர் பார்த்து தகவல் அளித்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் குழந்தையின் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த 5 நாட்களாக குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்து கதறி அழுதனர்.