August 22, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி அடுத்த சுபேகவுண்டன்புத்தூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது மகளுக்கு தீ வைத்து தாயும் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பையா கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி ஈஸ்வரசாமி என்கின்ற சதீஷ். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு சசிகுமார் என்ற 7 வயது மகனும், மகா ஸ்ரீ என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். சசிகுமார் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ் தினமும் மது அருந்திவிட்டு வருவதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மாலதி உணவு செய்யாமல் இருந்ததை கண்டித்து இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சதீஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த மாலதி குழந்தை மகாஸ்ரீ மீதும், தன் மீதும் மண்ணெண்ணயை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பின்னர்,அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆனைமலை போலீசார் தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,கணவர் சதீஸ்சிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடும்பத் தகராறில் குழந்தை மீது மண்ணெண்ணையை ஊற்றி,தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.