March 13, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் குண்டு கட்டாக அகற்றினர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட ஏராளமான இளம்பெண்களை 4 பேர் கொண்ட பாலியல் வன்கொடுமை செய்தது. பின்னர், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக, திருநாவுக்கரசு, சபரி ராஜன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் இருக்கும் நீதிமன்ற குடியிருப்பு வளாகம் முன்பு இளம்பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட மாணவர்களை அகற்ற போலீசார் முயன்றனர். அப்போது போலீசாருக்கும் – மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏறபட்டது. பின்னர் குண்டுகட்டாக மாணவர்களை போலீசார் அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.