January 9, 2019 தண்டோரா குழு
பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் இருக்கும் பொதுப்பிரிவு மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பொதுப்பிரிவு மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, மக்களவையில் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது. நேற்றுடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது என்றபோது, இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதற்கு மாநிலங்களவை அமர்வு ஒருநாள் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அவை கூடியபோது, மாநிலங்களவை அமர்வு நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கிடையில், இடஒதுக்கீட்டு மசோதாவை மத்திய சமூகநலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அமைச்சரின் பேச்சுக்கு இடையே அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.