January 8, 2019 தண்டோரா குழு
பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு, பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா லோக்சபாவில் ( இன்று 8 ம் தேதி ) தாக்கல் செய்யப்பட்டது.
சமூகப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், பொருளாதாரரீதியில் பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. இதற்கிடையில், முதல் முறையாக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீட்டை வழங்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்காக பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் வருடத்திற்கு ரூ. 8 இலட்சத்திற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் மற்றும் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள், இந்த இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், இன்று இந்த மாசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ராஜ்யசபாவில், நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.