April 13, 2019
பொதுமக்களிடம் சமரச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நீதிபதிகள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பாக இந்த வாரம் சமரச விழிப்புணர்வு வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை, என்ற முதுமொழியை மையமாக கொண்டு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ள சமரச மையம் உருவாக்கப்பட்டது.
இதில் நிலுவையிலுள்ள வழக்குகளை, நீங்களாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாக வேண்டுகோள் விடுத்து , சமரச மையத்தில் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது தீர்வுகள் கிடைக்க வழி கிடைக்கிறது. மேலும் சரியான தீர்வுகள் உடனடியாக கிடைப்பதால், மேல்முறையீடு இல்லை. செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திரும்பி வழங்கப்படும். இந்த சமரச பேச்சுவார்த்தைகள் மனித உறவுகளையும், சமூக உறவுகளையும் மேம்படுத்துகின்றன. இந்த சமரச மையங்கள் இந்தியா முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் செயல்பட்டு வருவதை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் கலந்துகொண்ட பேரணி , நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலகம் வழியாக மீண்டும் நீதிமன்ற வளாகத்தை அடைந்தது. சமரச மைய்யத்தை அணுகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.