January 5, 2019 தண்டோரா குழு
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். ரூ.258 கோடி ரூபாயில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில்,
“பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். கவரில் கொடுக்காமல் பணத்தை வெளிப்படையாக இரண்டு 500 ரூபாய் தாள்களை வழங்க வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதனை கண்காணிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு சென்று சேர்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் இதனை எளிமையாக பெற வழிவகை செய்ய வேண்டும். வரும் திங்கள் கிழமை முதல் அந்ததந்த பகுதிகளின் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த திட்டத்தை இன்று மாலை முதல்வர் எடப்பாடிபழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 10 குடும்பங்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்துள்ளார். 1.98கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. திங்கட் கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு துண்டு கரும்புத்துண்டு மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான முந்திரி, ஏலக்காய் உள்ளிட்டவை இருக்கும். இத்துடன் ரூ.1000 தொகை வழங்கப்படும். மேலும், சிறப்பு பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தில் ஏதேனும் முறைகேடு நடந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாணையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.