December 22, 2018
தண்டோரா குழு
பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் 6 பொருள்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது தைப் பொங்கல். தை1ம் தேதி கொண்டாடப்படும் இப்பண்டிகை போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர் பண்டிகையாக கொண்டாடப்படும். இந்நிலையில்,
பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் 6 பொருள்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தைப்பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. உழவர் பெருமக்கள், இயற்கையின் அருளினாலும், தங்கள் கடின உழைப்பாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார்கள்.
புதுஅரிசி கொண்டு பொங்கலிடும் இந்நன்னாளில் அனைவரின் வாழ்வில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருக மனமார வாழ்த்துகிறேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
புரட்சித்தலைவி அம்மா அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன் பெற்று பொங்கல் திருநாளை பாரம்பரிய முறைப்படி சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும்.
இப்பயனைப் பெற்று பொங்கல் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் இனிதே கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன் என அவர் கூறியுள்ளார்.