January 9, 2019
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்தார். ரூ.258 கோடி ரூபாயில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், இத்திட்டத்திற்கு தடை கோரி கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டியதன் நோக்கம் என்ன? பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுப்பதேன் ? பொங்கல் பரிசு என்ற பெயரில் வாரி வழங்கப்படும் பணம் கட்சிப்பணமா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
மேலும்,வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க கூடாது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவரக்ளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தர வேண்டும் உத்திரவிட்டுள்ளனர்.
வசதியானவர்களுக்கு தரும் பணத்தை சாலை போடும் பணிக்கு பயன்படுத்தலாம் என கூறிய நீதிபதிகள் தமிழக அரசு இது குறித்து உரிய பதிலளிக்க வேண்டும் என கூறினர்.
நீதிமன்ற உத்தரவால் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கிடைக்காது.