January 18, 2019
தண்டோரா குழு
பொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மது விற்பனை கடந்த ஆண்டை விட 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
பண்டிகை காலம் என்றாலே எல்லா கடைகள் போலவே டாஸ்மாக் கடைக்கும் வியாபாரம் அமோகமாக இருக்கும். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடுகின்றனர். இதற்கு ஏற்ப இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அதைப்போல் பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை கிடைத்தது. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊர்களில் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
இந்நிலையில், பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு போகி பண்டிகை(14-ந்தேதி) அன்று 143 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு இந்த விற்பனை 133 கோடியாக இருந்தது. பொங்கல் தினத்தன்று(15-ந்தேதி) 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி(நேற்று) மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டும். இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீத உயர்வாகும் என டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.