April 19, 2018
தண்டோரா குழு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானத்தின் விசாரணைக்கு உதவ பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் வற்புறுத்தினார்.
இது தொடர்பாக நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியானது.
இதையடுத்து புகாரின் பேரில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில்,இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று தனது விசாரணையை தொடங்கினார்.இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானத்தின் விசாரணைக்கு உதவ கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியை கமலி மற்றும் வேளாண் பல்கலைகழக பேராசிரியர் தியாகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.