April 17, 2018
தண்டோரா குழு
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியை ஏப்ரல் 28-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியாராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி.இவர் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து,பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் சக மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை நேற்று கைது செய்தனர்.அவரிடம் இரண்டாவது நாளாக இன்று விசாரணைநடைபெற்றது.
பின்னர்,பேராசிரியை நிர்மலாதேவி விருதுநகர் மாஜிஸ்திரேட் மும்தாஜ் முன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது,பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஏப்ரல் 28-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து,மருத்துவ பரிசோதனைக்கு பின் நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படவுள்ளார்.