May 20, 2019 தண்டோரா குழு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் இவர்களை விடுவிக்க, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
எனினும், விடுதலை செய்வதற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்து வந்ததால், ஆளுநர் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தார். இதனிடையே, கடந்த 9-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது, 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கில், ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக ஆளுநருக்கு ஒருலட்சம் தபால் அனுப்பும் நிகழ்ச்சியை நாடு முழுவதும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்தில் இருந்து ஆளுநருக்கு விடுதலை செய்யக்கோரி கடிதம் அனுப்பினர்.
அதில், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ல் தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி,28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.