September 14, 2019
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர்கள் வைக்க வேண்டாம் என தங்கள் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக், “இந்தச் சம்பவம் மிகவும் துயரமானதும் துரதிருஷ்டவசமானதும் ஆகும். சுபஸ்ரீ குடும்பத்துக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.