September 13, 2019 தண்டோரா குழு
பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ(23).நேற்று தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக நிகழ்ச்சிகளில் பேனர் வைக்ககூடாது என்ற அதிரடி உத்தரவை இன்று ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக நிகழ்ச்சிகளில் யாரும் கட் அவுட், பேனர்களை வைக்க கூடாது. பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பேனர்கள் வைக்க வேண்டாம். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை வைக்க கூடாது.இதனை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், திமுக நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கும் நிர்வாகிகள் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.