January 21, 2019 தண்டோரா குழு
கடந்த வருடம் மகேந்திர பாண்டி என்பவர் மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுதாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தினசரி 4 காட்சிகளுக்கு பதிலாக 24 மணி நேரமும் காட்சிகளை திரையிடுவது கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற விதிமீறலில் திரையரங்குகள் ஈடுபடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த நவம்பர் 1-ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கம் குறித்து புகார்கள் வந்தால் முறையாக விசாரித்து தியேட்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாத நிலையில் மனுதாரர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 8 தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதையடுத்து நீதிபதிகள் மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அம்பிகா, மூகாம்பிகை திரையரங்களுக்கு மாநகராட்சி தரப்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 2 அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ளாதது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பணியிடைநீக்கம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையை (Daily Collection Report) தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கில் கேளிக்கை வரி அலுவலர்களை தாமாக முன்வந்து சேர்த்த நீதிமன்றம், அதுதொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்