June 10, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் இனி கர்ப்பமான பெண்கள் தங்களது கர்ப்பத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு பத்திரமாக நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ய பெண்கள் தங்கள் கர்பத்தை சுகாதார துறையினரிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. அப்படி பதிவு செய்யாவிட்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படமாட்டது என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
“பெண்கள் மற்றும் குழந்தைகளில் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக இந்த திட்டம் இருக்கும். குழந்தையை எதிர்ப்பார்த்திருக்கும் தாய்மார்களின் மருத்துவ அறிக்கை, மருத்துவ பரிசோதனைக்கான நினைவுட்டல் அனுப்பவும், அனிமியா, நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கை அனுப்பவும் இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கிறது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக,“Pregnancy Infant Cohort Monitoring and Evaluation(PICME)” என்னும் திட்டம் தமிழகத்தின் மூன்று மாவட்டத்தில் சோதனை செய்யப்பட்டது” என்று சுகாதார செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
தனியார் மற்றும் பொது மருத்துவமனைக்கு வரும் கர்பிணிப்பெண்கள் சுகாதார செவிலியர் மூலமாகவோ அல்லது சுகாதார இணையதளத்தின் மூலமாக தங்கள் கர்ப்பத்தை பதிவு செய்துக்கொள்ள முடியும். தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெற்றெடுத்தல், கருவை அழிக்கும் காரணம் ஆகியவற்றை குறித்த தகவல்கள் அரசுக்கு எளிதாக தெரிய வரும்.
“பிரசவத்திற்காக பெண்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது, அந்த பகுதிகளிலுள்ள மருத்துவ சேவை அளிப்போருக்கு, அவர்களை குறித்த அனைத்து தகவல்களும் கிடைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வேப்பர் (பெரம்பலூர்), சூளகிரி(கிருஷ்ணகிரி), விராலிமலை(புதுக்கோட்டை) ஆகிய இடங்களில் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது” என்று மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.