February 23, 2019
தண்டோரா குழு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விமானக் கண்காட்சி நடைபெறும் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமாகின.
பெங்களுருவில், பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் ‘ஏரோ இந்தியா – 2019’ சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு நகரில் உள்ள ஏலகங்கா பகுதியில் ஜக்கூர் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த விமான கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சர்வதேச அளவில் பல போர் விமானங்கள் இங்கு வந்து சாகச நிகழ்ச்சி செய்துகொண்டுள்ளனர். இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனைவரையும் அனுமதிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயால் கார்கள் அனைத்தும் பற்றி எரியத் தொடங்கின. நண்பகல் 11.55 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. 12 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த திடீர் தீவிபத்தில் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகி இருக்கிறது.
ஒரே நேரத்தில் பல கார்கள் தீப்பிடித்து கொண்டதால் ஏலகங்கா ஜக்கூர் விமானநிலையம் முழுவதும் தற்போது கடும் புகை மண்டலமாக சூழ்ந்திருக்கிறது. முழு சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல் தீயை முழுவதுமாக தான் அணைத்த பிறகு தான் தெரிய வரும் என தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த காய்ந்த புற்களில், மர்ம நபர்கள் சிகரெட் புகைத்துவிட்டு அப்படியே போட்டதால், தீவிபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து பலத்த காற்று காரணமாக வாகனங்களுக்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது. மேலும், தீவிபத்து காரணமாக, விமான கண்காட்சி , தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.