July 3, 2018
தண்டோரா குழு
பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.இதனையடுத்து வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன்,பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.எனினும் பலர் #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் கமலிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.
அப்போது,ஒருவர் நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என கமலிடம் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த கமல்ஹாசன்,நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன் என பதிலளிலித்தார்.
இந்நிலையில்,கமலின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
அதில்,
டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த பிராமண குல துரோகி நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறோம்.பிராமண மக்களின் புனித அடையாளச் சின்னத்தை கீழ்தரமாக விமர்சித்தது கமலின் வக்ர புத்தியை காட்டுகிறது.பூணூலை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது?பணத்துக்காக கலையை விற்கும் ஒரு வியாபாரி,தான் பிறந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் கேவலம் எந்த ஜாதியிலும் இருக்காது.
ஜாதி இல்லை என்று கூறிக்கொண்டு தேவர் மகன்,விருமாண்டி மற்றும் பல படங்களில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்திக் காட்டியவர்தான் இந்த வேஷதாரி.தைரியம் இருந்தால் மற்ற சமூகத்தினரையும் விமர்சிக்கட்டும்.
இந்த அரைவேக்காடு,போலி அரசியல்வாதி பிராமண குலத்தில் பிறந்ததற்காக,நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம்,மனவேதனை அடைகிறோம்.வரும் தேர்தலில் பிராமண சமூகத்தினர் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனக் கூறியுள்ளார்.