February 19, 2019
தண்டோரா குழு
புல்வாமா தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனால் இந்தியா மக்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இருப்பினும் பாகிஸ்தான் எங்களுக்கு சம்பந்தம் கிடையாது என மறுப்பு தெரிவிக்கிறது. இப்போது புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், புல்வாமா தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? என கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது:
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு இந்தியாவிடம் எந்தஒரு வலுவான ஆதாரமும் கிடையாது. சவூதி இளவரசருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் இருந்ததால் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தேன். இந்திய அரசாங்கம் தகுந்த சாட்சியங்களை அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைக்காக எங்கள் மண்ணை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது எங்களது கொள்கை. காஷ்மீர் தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஆதாரம் வழங்கினால், நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். நாங்களும் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளோம். காஷ்மீர் பிரச்னைக்கு பாகிஸ்தான் மீது வேண்டுமென்றே குற்றம்சாட்டப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என விரும்புகிறோம். புல்வாமா தாக்குதலில் இருந்து பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்? ஸ்திரமான நிலையை நோக்கி நகர வேண்டும் என்ற நிலையை பாகிஸ்தான் கொண்டுள்ளது. புதிய பாகிஸ்தான் புதிய சிந்தனையை கொண்டுள்ளது,”
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான் “நீங்கள் எங்களை தாக்க வேண்டும் என்று நினைத்தால், நாங்கள் பதிலடி கொடுப்பது குறித்து நினைப்போம். ஒரு போர் தொடங்குவது என்பது மனிதர்களின் கையில்தான் உள்ளது. இது எங்கு சென்று முடியும் என்பது கடவுளுக்குதான் தெரியும். இந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.