February 15, 2020
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் குறித்து போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த இருவாரங்களில் எல்.எஸ்.டி மற்றும் போதை மாத்திரை உட்பட புதிய வகை போதை பொருட்களை விற்பனை செய்த பலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த கும்பலைச் சேர்ந்த கேரள நபர்கள் கல்லூரி மாணவர்கள் போர்வையில் மயிலேறிபாளையம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இன்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மயிலேரிபாளையம் பகுதியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த பில்ஜூலால்,
அர்ஜூன்பிரசாத் , சாரங் ஆகிய மூன்று பேரிடம் இருந்து போதை மருத்து தடவிய LSD அட்டை, methamphetamine போதை மருந்து, 1.25 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த இந்த நபர்கள் கோவையில் தங்கி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி துறையில் இருக்கும் ஊழியர்களை குறிவைத்து அவ்வப்போது பெரிய அளவில் பார்ட்டி நடத்தி வந்திருப்பதும்,இதுபோன்று பார்ட்டி நடத்தி இந்த புதிய வகை போதை பொருட்களை விநியோகம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் சிலரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.