July 15, 2019 தண்டோரா குழு
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் ஒரு விழாவில் விமர்ச்சித்திருந்தார் .இந்நிலையில் அவருடைய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கல்வி தந்தை காமராஜர் 117வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், காமராஜர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவது அனைவருக்கும் நல்ல கல்வியை கொடுப்பதற்கு தான். ஆனால், தமிழகத்தில் அதையும் எதிர்க்கிறார்கள். கல்வியை அனைவருக்கும் சமமாக கொடுப்பது தான் இந்த புதிய கல்வி கொள்கை. இதை பற்றி பற்றி தெரியாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா, தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும் அரசியலில் நுழைவதற்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா என கேள்வி எழுப்பினார். முன்னதாக, புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். நன்கு தெரிந்துக்கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம், தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்? என அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளுக்கு எவ்வித ஆபத்துகள் இல்லாமலும் எண்ணிக்கை குறையாமலும் அரசு பார்த்துக்கொள்ளும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.