January 24, 2019 தண்டோரா குழு
சாக்லேட், பிஸ்கட், மசாலா பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக 95 நிறுவனங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை வித்தித்து உத்தரவிட்டதையடுத்து இந்த தடை கடந்த ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பிஸ்கட், சாக்லேட், சாம்பூ மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நெஸ்ட்லே, டாபர் இந்தியா, பிரிட்டானியா, பெப்ஸிகோ, ரிலையன்ஸ், ஆச்சி, எம்.டி.ஆர், மற்றும் சக்தி மசாலா, அமுல் டெய்லி, பார்லே, ஆவின் மற்றும் கேட்பரி இந்தியா உள்பட 95 நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமெனில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அந்த நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பவும் பெருநிறுவன பொருட்களின் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சேகரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட உள்ளது.