April 26, 2019 தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வாரணாசி மக்களவை தொகுதிக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட தகுதிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வேட்பு மனுவில், தனது மனைவியின் பெயர் யசோதாபென் என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, 1978ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், 1983ம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டமும், பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குஜராத்தின் காந்திநகரில் உள்ள 3,531 சதுர அடி வீட்டு மனை, வங்கியில் 1.27 கோடி ரூபாய்க்கு வைப்புத்தொகை, 38,750 ரூபாய் சேமிப்புத் தொகை உட்பட 2.5 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை”.1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், 1.1 கோடி ரூபாய் (காந்திநகரில் உள்ள வீட்டுமனை) மதிப்புள்ள அசையா சொத்துக்களும் தன்னிடம் உள்ளதாக வேட்பு மனுவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை எனவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014 தேர்தலின் போது பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பாக 1.65 கோடி ரூபாயை அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.