March 12, 2019 தண்டோரா குழு
பிரதமராக, மோடி தான் அதிகளவில் தமிழகத்திற்கு வந்து உள்ளார்.என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் தெரிவித்து உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர், முரளிதரராவ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தேசிய ஐனநாயக கூட்டணி , இந்தியாவில் மிகப்பெரிய , வலுவான கூட்டணியாக உள்ளது. கூட்டணி தொடர்பாக கேரளாவில் இடதுசாரிகளும் , காங்கிரசும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலைவர் இல்லை. இந்திய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே மோடி தலைவராக உள்ளார். வருகிற 23,24 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா முழுவதும் உள்ள பாஜக வேட்பாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள்.
தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் வேட்பாளர்களின் பெயர்கள் வருகிற நான்கு, ஐந்து தினங்களில் இறுதி செய்யப்படும். தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதி மட்டுமில்லாது அனைத்து தொகுதிகளிலும் பாஜக கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். குடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானவர்கள். மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்தலை தள்ளிவைக்க கேட்டு கொண்டு உள்ளோம். தேர்தல் ஆணையம் தான் இதற்கு முடிவு செய்ய வேண்டும் என கூறினார். மேலும், பிரதமராக, மோடி தான் அதிகளவில் தமிழகத்திற்கு வந்து உள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு இதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தி உள்ளோம். அதிமுகவினர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.
பாஜக அமைத்து உள்ள கூட்டணியில் உள்ள அதிமுக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு , ஒரு குடும்பத்திற்கு உள்ளேயே வேறு வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருப்பார்கள் அதே போல தான் கூட்டணி கட்சிகளும் என தெரிவித்தார்.