February 19, 2019
தண்டோரா குழு
அதிமுகவுடன் பாஜகவின் கூட்டணியை உறுதி செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க சென்றிருந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அவர் வரவில்லை, என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்று முடிவடைந்தன. இதில் பாமக-வுக்கு 7 இடங்களும், பாஜக-வுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 இடங்களில் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸுடன் இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், உடனடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க சென்றார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதரவ் ராவ் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், மத்திய அமைச்சரின் சந்திப்பு, விஜயகாந்தின் உடல்நலத்தை விசாரிப்பதற்காகவே என்றும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அல்ல, என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக சார்பாக வெளிட்ட ட்விட்டர் பதிவில்,
“பாஜகாவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர், மத்திய அமைச்சர் திரு.பியூஸ்கோயல் அவர்கள், தேசிய முற்போக்கு திராவிடகழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாகவும், உடல்நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்” என்று அவர்கள் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளனர்.