September 25, 2020
தண்டோரா குழு
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலகுறைவால் இன்று காலமானார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்காக பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், கடந்த மாதத்தின் இறுதியில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாகவும், பிஸியோதெரபி சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது. ஆனால்,நேற்று மாலை எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்தார்.